புழல் : சோழவரம் அடுத்த காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சோழவரம் அடுத்த காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகே ஒரு மாந்தோப்பில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக சோழவரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாந்தோப்பில் ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வாலிபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சோழவரம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.