பூந்தமல்லி: டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், பள்ளிகள், வீடுகளில் அடிக்கடி சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சுகாதார இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் டாக்டர் வேல்முருகன், வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா, சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை கேண்டீன், கிடங்கு மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ₹2.50 லட்சம் அபராதம் விதித்தனர். இதேபோல தனியார் பள்ளியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பள்ளிக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.