ஆவடி: ஆவடியிலுள்ள பருத்திப்பட்டு ஏரி நிறைந்து வெளியேறும் உபரிநீர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வசந்தம் நகர், விவேகானந்த நகர் பகுதி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆவடியில் 80 ஏக்கர் பரப்பளவில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் இந்த ஏரி நேற்று முன்தினம் இரவு முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரிநீர் மதகு வழியாக வெளியேறி வருகிறது. இந்த உபரிநீர் ஆவடி- பூந்தமல்லி சாலை, வசந்தம் நகர், விவேகானந்தா நகர், தனியார் கல்லூரி வழியாக அயப்பாக்கம் ஏரியை சென்றடைகிறது. இந்த பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், சில இடங்களில் உடைந்து கிடப்பதாலும் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களது உடமைகளை இழந்து பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அவர்கள் வணிக நிறுவனங்களை இழுத்து பூட்டிவிட்டு சென்றனர். இதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.