பல்லாவரம்: சென்னை அருகே திருமுடிவாக்கம் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் நேற்று தண்ணீரில் இறங்கி சாலையை கடக்க முயன்ற நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். பல்லாவரம் அருகே திருநீர்மலை, திருமுடிவாக்கத்தை இணைக்கும் அடையாறு செல்கிறது. இந்த ஆற்றில் பாலம் கட்டுமான பணி கடந்த ஒரு வருட காலமாக நடந்து வருகிறது. போக்குவரத்திற்காக தற்காலிகமாக தரைப்பாலம் போடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்காலிக தரைப்பாலம் நேற்று முன்தினம் மழையால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.