×

அரசு பெண்கள் பள்ளியில் 1000 மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்

முத்துப்பேட்டை, அக்.23: முத்துப்பேட்டை பகுதியில் கடந்தாண்டு நவம்பர் 15ம்தேதி கஜா புயலின் கோரத்தண்டவத்தால் இப்பகுதியில் ஒட்டுமொத்தத்தையும் புரட்டி போட்டது. இதில் பூயில் பசுமை போர் தழைத்திருந்த தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான அரியவகை மரங்களை முறித்து அடியோடு சாய்த்து துவம்சம் செய்துவிட்டு மாயமானது. இதனால் இப்பகுதி மக்கள் மீண்டும் வீழ்ந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளனர். இதனால் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் ஏராளமான மரச்செடிகளை நட்டு வருகின்றனர்.அதேபோல் அரசும் சுற்றுச்சூழலை காத்து மழையை தருவிக்கும் மரங்களை வளர்க்க தீர்மானித்து அரசு திட்டநிதியும் ஒதுக்கீடு செய்ததுள்ளது. இதையடுத்து முத்துப்பேட்டை பகுதி முழுவதும் அரசுக்கு ஆதரவாக தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் ஆகியன மண்வெட்டி உள்ளிட்ட சாதனங்களுடன் களமிறங்கி மரக்கன்றுகளை நடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் பெரும்பாலும் மாணவர்கள் முயற்சியை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு செய்வதில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகிறது.இந்நிலையில் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரங்களின் அவசியத்தையும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் சிறப்பு கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். இதில் விதைக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் நந்தாஜீவானந்தம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரங்கள் வளர்ப்பது மூலம் இயற்கை காப்பாற்றப்படுகிறது, இதன் மூலம் நமது சந்ததிகள் வருங்காலத்தில் வாழ வழிவகை செய்கிறது என்றார். இதனை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பல்வேறு வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மரக்கன்றுகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் சிறந்த மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசு திட்டமும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிரங்கசாமி, இயற்கை ஆர்வலர்கள், ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Government Girls' School ,
× RELATED பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி