அண்ணாநகர்: சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளுடன் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு தொற்றுநோய் பரவும் பீதியில் சுமை தூக்கும் தொழிலாளர்களும், வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர்.ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிதாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், காய்கறி, பூக்கள் என அனைத்து கடைகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து விதமான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நடைபெறுவதால், நாள்தோறும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் ஏராளமான லாரிகள் மூலம் சரக்குகள் வந்து சேருவதால், மார்க்கெட்டை சுற்றிலும் காய்கறி, பழம் மற்றும் பூக்களின் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கும். இதில் மழை பெய்யும்போது, அவை கழிவுகளாக உருமாறி, கொசுக்களின் உற்பத்தி கூடமாக உருமாறி காணப்படும்.