ஆவடி: ஆவடி புதிய ராணுவ சாலை, பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆவடி நகர நில அளவை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, தனி வட்டாட்சியராக ஸ்ரீதரன் என்பவர் பணியாற்றி வந்தார். பட்டா, பட்டா பெயர் மாற்றம் போன்ற பணிகளுக்கு இங்கு பொதுமக்கள் வழங்கும் விண்ணப்பங்களை அதிகாரிகள் நேரடியாக பெறாமல், புரோக்கர்கள் மூலம் 25 முதல் 35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுகொண்டு பட்டா வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதுதவிர ஆவடி பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு, குளம், குட்டை, நீர்நிலை புறம்போக்கு, கோயில், அனாதீனம் ஆகிய நிலங்களுக்கு போலி பட்டா வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பொதுமக்கள் சார்பில் ஏராளான புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில், கடந்த 11ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுரு தலைமையில் போலீசார், ஆவடி நில அளவை பிரிவு அலுவலத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த சில புரோக்கர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அலுவலகத்தில் இருந்த தனி வட்டாட்சியர் ஸ்ரீதரன் மற்றும் 3 பெண் ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரித்தனர்.