புதுச்சேரி, அக். 10: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணனின் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான கண்ணன் வெளியிட்ட அறிக்கை: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மாற்றமா? ஏமாற்றமா? என்பது மக்களுக்குதானே தவிர அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. பல்வேறு சக்திகள் அரசியல் என்ற பெயரிலே பணம் பார்க்கிற வேலைகளைத்தான் மும்முரமாக பார்க்கின்றன.எல்லாவற்றுக்கும் ஒரு விலை என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இப்போது எனது மனவேதனை என்னவென்றால் படித்தவர்கள், விஷயம் புரிந்தவர்கள், வியாபாரிகள், நாட்டு நடப்பு தெரிந்தவர்கள் அதிகம் நிறைந்த காமராஜர் நகர் தொகுதி தற்போது ஏலம் விடப்பட்டு இருப்பதுதான்.
ஏலம் எடுப்பவர்களுடைய பொருளாதாரத்தை பொருத்தே இந்த தொகுதியினுடைய தலையெழுத்து முடிவாகும் என்றால் தாய்மார்களுடைய எதிர்காலம், அப்பாவி மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலைமை மாற வேண்டுமென்றால் நேர்மையான தலைமை தேவைப்படுகிறது. அது எந்த கட்சி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த பெரிய பாதிப்பையும் உருவாக்கி விடாது.எனவே மக்கள் நல்ல முடிவை எடுத்து ஒரு நல்லாட்சிக்கு அடித்தளம் இடுங்கள். நல்ல ஆளுங்கட்சியும், அச்சமற்று திறமையோடு ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்துகின்ற ஒரு எதிர்க்கட்சியும் ஜனநாயகத்துக்கு தேவை என்பதை தான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆகையால் இந்த தேர்தலில் ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று மட்டும் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.