சூளகிரி அருகே லாரி மோதி ஆசிரியர் சாவு தொடர் சாலை விபத்தால் கிராம மக்கள் பீதி

சூளகிரி, அக்.4: சூளகிரி அருகே ஜவுளி பாரம் ஏற்றிவந்த லாரி மோதியதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சூளகிரி பகுதியில் தொடரும் சாலை விபத்தால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.சூளகிரி அருகே உத்தனப்பள்ளி கொம்பேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன்(69). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், அருகில் உள்ள கோபசந்திரம் பகுதிக்கு சென்று அங்குள்ள கடை வீதியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை கோபசந்திரம் வந்த அவர், தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மதியம் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அந்த சமயத்தில் குஜராத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக்கடைக்கு தீபாவளி ஜவுளி ரகங்களை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்ற லாரி அவர் மீது மோதியது. பின்னர், நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓய்வு ஆசிரியர் ராஜன் மற்றும் லாரியை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த டிரைவர் ராஜன்(27) மற்றும் புஷ்பராஜ்(30) ஆகியோர் படுகாயமடைந்தனர். சிறிது நேரத்திலேயே ஓய்வு ஆசிரியர் ராஜன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஓய்வு ஆசிரியர் ராஜன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள்  மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இப்பகுதியில் சாலை விபத்துக்கள் தொடர்கதையாக உள்ளது. வாரத்திற்கு 4 சாலை விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் வீதம் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக சாலையை கடந்து செல்லும் அப்பாவி கிராம மக்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது. எனவே, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சூளகிரி, உத்தனப்பள்ளி, கோபசந்திரம், மேலுமலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் அமைத்து சுற்றுப்புற கிராம மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: