திருவொற்றியூர்: திருவொற்றியூர் கார்கில் நகரில் இருந்து வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டுக்குட்பட்ட ராஜாஜி நகர், கார்கில் நகர் ஆகிய பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் மாநகர பேருந்தில் பயணம் செய்ய சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சத்தியமூர்த்தி நகர் அல்லது திருவொற்றியூர் மார்க்கெட் தெருவிற்கு செல்ல வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து கார்கில் நகரில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்க திட்டமிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன், இங்கிருந்து உயர் நீதிமன்றம் வரை செல்லும் தடம் எண்: எம் 56 மற்றும் கோயம்பேடு வரை செல்லும் தடம் எண்: 156 கே ஆகிய மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.