சென்னை: லிப்ட் கேட்பதுபோல் தனியாக வரும் வாகன ஓட்டிகளை வழிமறித்து, கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் பறித்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடந்த மாத இறுதியில் பொன்னேரி பஜார் அருகே பைக்கில் வந்த பொதுப்பணித்துறை ஊழியரை 3 பேர் வழிமறித்து, 5 சவரன் சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன், மகளுடன் நடந்து சென்ற மூதாட்டியை தாக்கி, இருவரிடம் இருந்து 8 சவரன் நகைகளை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதுதவிர, பொன்னேரி பகுதியில் பல்வேறு இடங்களில் தனியே நடந்து செல்பவர்களை மர்ம கும்பல் வழிமறித்து, கத்தியால் தாக்கி கொள்ளையடித்து வந்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில், கொள்ளை கும்பலை பிடிக்க பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் ரெட்டி தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிவதை பார்த்தனர். இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.