×

காதலிக்க மறுத்ததால் வைகை அணையில் குதித்த வாலிபர்

ஆண்டிபட்டி, ஆக.20: ஆண்டிபட்டி அருகே காதலி காதலை ஏற்க மறுத்ததால் வைகை அணையில் வாலிபர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்தவர் நாகராஜ் மகன் விஜய்(24). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு திருப்பூரில் தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தேனியை சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் பெண் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த பெண்ணுடன் வைகை அணை பகுதிக்கு விஜய் வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். அவர் மறுத்ததால் அணை தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த வைகை அணை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் மாலை 4 மணியிலிருந்து இரவு சுமார் 7 மணி வரை மழை பெய்ததால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று காலை ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் வைகை அணையின் நீர்தேக்க பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதனிடையே விஜய்  நேற்று முன்தினம் இரவே கரை ஏறி, தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வைகை அணை காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தேடும் பணியை கைவிட்டனர். மேலும் வைகை அணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு