கள்ளக்குறிச்சி, ஆக. 20:
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மண்டல அளவில் வருகிற 29ம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து அனைத்து மருந்தாளுநர் சங்கம் மாவட்ட பொதுக்குழு ஆயத்த கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் அன்புதுரை தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட இணை செயலாளர் மலர்கொடி, மூத்த மருந்தாளுநர் பிரேமாநந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோதிலட்சுமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஷபி விளக்கவுரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், துணை தலைவர் ரமேஷ், செந்தில்முருகன், நிர்மலா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில், மாநில அளவில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து மருந்தாளுநர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் அரசு பொதுமருத்துவமனையில் கூடுதலாக மருந்தாளுநர் பணியிடங்ளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரவிராஜா நன்றி கூறினார்.