இடைப்பாடி, ஜூலை 16: தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், நேபால் காத்மாண்டு மற்றும் மேட்டூர் ஆகிய இடங்களில், தேசிய அளவிலான வில்வித்தை போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில் இடைப்பாடியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா, இடைப்பாடியில் தமிழ்நாடு கிராம விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு கிராம விளையாட்டு சங்க தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் சந்திரன், செயலாளர் சதீஷ்ராஜா, துணைப்பொருளாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிரண்ராஜ், சிவனேசன், வசந்த், திகந்த், சர்வேஸ், சௌந்தரராஜன் ஆகியோர் முதல் பரிசும், அண்ணாமலை, சிவசூர்யா, விஜய்ஆனந்த், பாலமுருகன், முகமது யாசிப் ஆகியோர் 2ம் பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சங்க தலைவர் தர்மலிங்கம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.