வேலூர், ஜூன் 27: தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உறுப்பினர்களாக இணைக்க ஆதார் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் இதற்காக வீடுதோறும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் நியாயவிலை கடைகள் மூலம் ஏழை– எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 25 ஆயிரத்து 49 முழு நேர ரேஷன் கடைகளும், 8 ஆயிரத்து 173 பகுதி நேர ரேஷன் கடைகளும், 14 நடமாடும் ரேஷன் கடைகளும் என்று 33 ஆயிரத்து 222 கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1 கோடியே 92 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வினியோகம் செய்வதற்கு மொத்தம் 1,249 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 1,062 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் தகுதியுள்ள அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, உளுந்து–, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குடும்ப அட்டைகள், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டு, ஆதார் எண்கள் இணைத்து நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெயர்களை ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டையுடன்) இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளை வட்ட வழங்கல் அலுவலர்களே நேரடியாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு அழைத்துச்சென்று ஆதார் புகைப்படம் எடுத்து, குடும்ப அட்டையில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என்று வழங்கல் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் விவரங்கள் சேகரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை குடும்ப உறுப்பினர்களாக ேசர்க்க ஆதார் புகைப்படம் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பட்டியலை கொண்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அவர்களை ஆதார் மையங்களுக்கு அழைத்துச்சென்று புகைப்படம் எடுக்க வேண்டும். இதனை வழங்கல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்.