கள்ளக்குறிச்சி, ஜூன் 26:கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திருக்கோவிலூர் அடுத்த சுந்தரேசபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள நீரேற்று நிலையங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள இடங்களில் போதிய மழையின்மை காரணமாகவும் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாகவும் தற்போது போதிய அளவு குடிநீர் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. எனவே நகராட்சி மூலம் வழங்கும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், வாகனங்கள் மற்றும் கால்நடைகளை கழுவுவது ஆகியவற்றை தவிர்த்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சம்பந்தமான புகார்களை 04151-222272 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
மேலும் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்களின் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. குடிநீர் விநியோகத்தின்போது மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது நகராட்சி பணியாளர்களால் கண்டறியப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு குடிநீர் இணைப்பை நிரந்தரமாக துண்டிப்பு செய்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.