பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் நுண்உர செயலாக்க கூடம் அமைக்க எதிர்ப்பு

ஆத்தூர்,  ஜூன் 19: ஆத்தூர் நகராட்சியில் பூங்கா அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட  இடத்தில் நுண்உர செயலாக்க கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள்  நேற்று  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர்  நகராட்சி 2 மற்றும் 3வது வார்டு பகுதியில் உள்ள ஸ்டேட் பங்க் காலனி  பகுதியில் பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில், தற்போது  நகராட்சியின் மூலம் நுண்உர செயலாக்க கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  பொதுமக்கள் கூறியதாவது: ஸ்டேட் பங்க் காலனி பகுதியில் வீட்டுமனை பிரிவுகள்  அமைத்த போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க இடம் ஒதுக்கீடு  செய்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பூங்கா  அமைக்க வேண்டிய இடத்தில், நுண்உர செயலாக்க கூடம் அமைக்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருகிறது. இங்கு பூங்கா அமைக்க வேண்டும் என கோரி மாவட்ட  கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தோம். ஆனால்  உரக்கூடம் அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. எனவே, இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம்  என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தினர். தஙகளின் கோரிக்கையை பரிசீலினை செய்து உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து  முற்றுகையை கைவிட்டு  அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: