தேன்கனிக்கோட்டை அருகே கார்பெண்டர் வீட்டிற்கு தீ வைப்பு தேன்கனிக்கோட்டை,

ஜூன் 12: தேன்கனிக்கோட்டை அருகே கார்பெண்டர் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, டி.குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவப்பா(50). கார்பெண்டரான இவர், விவசாயமும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், வீட்டில் மரப்பொருட்கள் இருந்ததால், தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தின்போது மாதேவப்பா வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினார். இதுகுறித்து தேன்கனிக்கோட்ைட போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், மாதேவப்பாவின் வீட்டிற்கு மீண்டும் தீ வைத்துள்ளனர். இதில் மரப்பொருட்கள், விவசாய கருவிகள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து நேற்று காலை மாதேவப்பா 2வது முறையாக தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் சிலர் எனது வீட்டிற்கு தீ வைத்ததில், மரச்சாமான்கள் என ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன. இந்நிலையில், மீண்டும் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக யாரேனும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: