×

சேலம் மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட கைதி

சேலம், மே 25: சேலம் மத்திய சிறையில் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையை சேர்ந்த  பிரபல ரவுடி சாம்பார் பிரகாசும்(26) ஒருவர். இவர் மீது 4 கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில், இவரை பார்க்க வந்த சேலம் அழகாபுரம் பெரியபுத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், பிஸ்கெட்டிற்குள் கஞ்சா பதுக்கி கொண்டு வந்த போது, காவலர்களிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சாம்பார் பிரகாசுக்கு கஞ்சா கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி சாம்பார் பிரகாசிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தனியறையில் வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கைதி சாம்பார் பிரகாஷ், பிளேடால் தனது கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் அறுத்துக்ெகாண்டார். வலி தாங்க முடியாமல் கதறியழுத அவரை, சிகிச்சைக்காக அதிகாரிகள் வெளியே கொண்டு வந்த போது, அங்கிருந்த லைட்டை அடித்து நொறுக்கினார். பின்னர் அவரை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் மதிவாணன் அளித்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Prisoner ,Salem Central Jail ,
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி