மதுரை, மே 25: ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் “பயோ மெட்ரிக்” கருவி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின்பு, வரும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் நாள் முதல், ஆசிரியர்களின் வருகையை “பயோ மெட்ரிக்” கருவி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவியை பொருத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு, ஊழியர்கள் வருகை பயோ மெட்ரிக் கருவியில் பரிசோதிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 70 அரசு பள்ளிகள், 42 அரசு உதவிபெறும் பள்ளிகள், 24 பகுதி அளவிலான உதவிபெறும் பள்ளிகள், 2 சிறப்பு பள்ளிகள், 18 கள்ளர் பள்ளிகள், 3 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளன என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.