சூளகிரி, மே 7: ஓசூர் அருகே, சானமாவு வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக 20 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் முகாமிட்டு, விளை பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த வாரம் கதிரேப்பள்ளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள், தொழிலாளி ஒருவரை தாக்கி கொன்றன. மனித உயிருக்கும், பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் யானைகளை வனத்துறையினர் போராடி விரட்டினாலும், வனப்பகுதிக்கு செல்வதே இல்லை. இந்நிலையில், இந்த 20 யானைகளும் கோலார் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இதில் 6 யானைகள் கடந்த ஒரு வாரமாக வேப்பனஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. 7 யானைகள் சானமாவு வனப்பகுதியிலேயே முகாமிட்டு ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன.