. 3 சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர், கடந்த 2016ம் ஆண்டு மாலை தனது வீட்டின் அருகே வசித்தும் வரும் சிறுமிகள் மூன்று பேரை, விளையாட அழைத்து செல்வதாக கூறி, சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர், பெற்றோர்கள் இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி விஜையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சிறுமிகளுக்கு எதிரான வழக்கில் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனை ஏககாலத்தில் (5 ஆண்டு) அனுபவிக்க வேண்டும், என்று கூறி உத்தரவிட்டார். இதையடுத்து விஜய் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: