சென்னை: சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் சகாயராஜ் தலைமையிலான ரயில்வே பாதுகாப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலைய வளாகத்தில் ஒரு சிறுவன் சுற்றித்திரிவதை போலீசார் கவனித்து விசாரித்தபோது உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜோப்பா பகுதியை சேர்ந்தவன் என்றும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் மூலம் சென்னை வந்ததும் தெரியவந்தது. பின்னர் பெற்றோரின் விவரங்களை பெற்றுக் கொண்டு சிறுவனை அருகில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.