மீனம்பாக்கம்: பாரீசில் இருந்து டெல்லி வழியாக ஏர் இண்டியா விமானம் நேற்று மாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கையை சேர்ந்த ராஜலிங்கம் மகிந்தன் (30) என்பவர் சென்னை வந்தார். இவர், தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்றார். அவர் சென்ற வழியில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் இவரது உடமைக்குள் ஏதோ கடத்தல் பொருள் இருப்பதற்கான சிக்னல் ஒலித்தது. இதனால் அதிகாரிகள், ராஜலிங்கம் மகிந்தனை மீண்டும் உள்ளே அழைத்து, அவரது உடமைகளை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர். அப்போது, அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையில் 4 விநாயகர் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சிலைகள் 12 காரட் தங்கத்தால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.65 லட்சமாகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.