தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் திமுக தோழமை காட்சிகளை சேர்ந்த பகுதி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் உடன் சென்று பிரசாரம் செய்தனர். அப்போது டி.ஆர்.பாலு பேசியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ மோடியிடம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அதாவது, தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுகிறோம். இதற்கு அநியாய வரியை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு லிட்டர் பெட்ரோல் 74-75 ரூபாய். இது நியாயமான விலை கிடையாது. பெட்ரோல் விலையை அது சம்மந்தப்பட்ட அமைச்சர், அரசாங்கம், பிரதமர் ஆகியவர்கள் தான் நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால் இந்த விலையை தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனம் தான் நிர்ணயிக்கிறது.