சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு கெட்டுப்போன ரத்தம் ஏற்றியது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:
சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றிய விவகாரம் அடங்குவதற்குள் இப்போது கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணி பெண்கள் இறந்தது தெரிய வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல், முறைகேடுகளின் வெளிப்பாடு தான் இது. சுகாதாரத்துறையை கட்டமைப்பதில் தமிழக அரசு தோற்றுப் போய்விட்டது. சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு ரத்த வங்கிகளை முறையாக பராமரிக்கவில்லை. ரத்த பரிமாற்றம் தொடர்பான சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் மட்டுமே ரத்த வங்கிகளில் பணியாற்ற வேண்டும். ஆனால் அந்த படிப்பை படிக்காதவர்கள், தற்காலிக ஊழியர்கள் ரத்த வங்கிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கவில்லை. அதிநவீன உபகரணங்கள் வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு, பழைய உபகரணங்கள் வைத்து பணியாற்றுகிறார்கள்.