திருவண்ணாமலை, மார்ச் 26: போளூர் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த தொகுதிக்கு தேவையான இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி போளூர் சட்டப்பேரவை தொகுதிக்கான 371 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 371 கட்டுப்பாட்டு கருவிகள் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அவற்றை தேர்தல் உதவி அலுவலர் கே.அரிதாஸ், தாசில்தார் பா.ஜெயவேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அ.பாலாஜி, துணை தாசில்தார்கள் ஆர்.முனிராஜ், அ.ஆனந்தகுமார், ஆர்.மஞ்சுளா ஆகியோர் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் அறைக்கு எடுத்து சென்று ‘சீல்’ வைத்தனர். வாக்குப்பதிவு உறுதி செய்யும் விவிபேட் கருவி விரைவில் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.