நாகர்கோவில், மார்ச் 20: இரணியல் அருகே வருவாய் துறை அதிகாரியாக நடித்து 3 பவுன் தங்க நகை, பட்டு சேலையை அபேஸ் செய்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (63). இவரது மனைவி கமலம் (58). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் மதியம் வீட்டில் இருந்த போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். டிப் டாப் உடை அணிந்திருந்த அவர், வருவாய்த்துறையில் இருந்து வருவதாக கூறி வீட்டில் இருந்த பிரபாகரன் மற்றும் கமலத்திடம் குடும்ப விவரங்களை விசாரித்தார். அப்போது உங்கள் இருவருக்கும் முதியோர் உதவி தொகை கிடைக்கும். அதற்காக தான் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அரசு சார்பில் முதியோர் வழங்கப்படும் உதவி தொகையை உங்களுக்கும் வாங்கி தருகிறேன் என கூறினார். இது தொடர்பாக உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும். நகை அணிந்து கொண்டு இருந்தால் பணம் கிடைக்காது என்றார். இதையடுத்து கமலம், தான் அணிந்திருந்த 24 கிராம் தங்க வளையல்களை கழற்றினார்.
அந்த வளையல்களை வாங்கிய அந்த பெண் வீட்டில் இருந்த டேபிளில் வைத்துள்ளார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். கமலம் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நைசாக டேபிளில் வைத்த வளையலை திருடியதுடன், பீரோவில் இருந்த பட்டு புடவை ஒன்றையும் அபேஸ் செய்து தனது பேக்கில் வைத்துக் கொண்்டார். இது பற்றி தெரியாத கமலம் அந்த பெண்ணிடம் நல்லமுறையில் பேசி அனைத்து விவரங்களையும் கூறியதுடன், தானும் பஸ் நிறுத்தம் வரை உடன் சென்று அந்த பெண்ணை நாகர்கோவிலுக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்த பின்னர் வளையலை தேடிய போது மாயமாகி இருந்தது. அதன் பின்னர் தான் நகை மற்றும் பட்டு புடவை திருடப்பட்ட விவரம் கமலத்துக்கும், அவரது கணவருக்கும் தெரிய வந்தது. பின்னர் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.