பல்லாவரம்: குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பெரும்புதூர் தொகுதி மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்றது. இதில் அதிமுக, பாமக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் அக்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பிற்பகல் இரண்டு மணி முதல் கூட்டம் நடைபெறுவதாக இருந்த தனியார் திருமண மண்டபத்தில் காத்திருந்தனர். ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு போட்டியிடும், பாமக கட்சியை சேர்ந்த வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் மாலை 5.45 மணிக்கு சாவகாசமாக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்தார்.
இதனால் வெகுநேரம் அவருக்காக காத்துக் கிடந்த தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஆரம்ப நாளான வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கே இப்படி லேட்டாக வருகிறாரே என்று புலம்பியவாறு இருந்தனர். மேலும் சில தொண்டர்கள் காத்திருந்து, காத்திருந்து, விரக்தியில் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.இறுதியில், பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் கூடி இருந்த தொண்டர்களிடையே ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு, வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றார். இதனால் அவர் வெகுநேரம் பேசுவார் என்று காத்திருந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றமடைந்தனர். அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் இந்த திடீர் அறிமுக கூட்டத்தால், குன்றத்தூர் பிரதான சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.