விழுப்புரம், மார்ச் 19: காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊராட்சி களப்பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி களப்பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிமுடித்த துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்களுக்கு தொட்டி சுத்தம் செய்வதற்கான படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீரப்பன், அரசு பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் கோபால், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.