கரூர், மார்ச் 14: கரூர் தாந்தாந்தோன்றிமலை உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோன்றிமலை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. அரசு ஊழியர்கள் முதல் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து தரப்பினர்களும் இந்த வளாகத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு 50 ஆண்டுக்கும் மேலாகிறது. 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் இரண்டு பிளாக்குகள் மட்டும் பழுதடைந்துள்ளதால் குடியிருப்புகள் இங்கு இல்லை. மேலும், குடியிருப்பு வளாகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தாலும் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில்தான் உள்ளன. இந்த வளாகத்தில் உள்ள குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல், குடியிருப்பு வளாக பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை வடிகால் சரிவர தூர்வாரப்படாத காரணத்தினால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். வளாகத்தின் மையப்பகுதியில் சாக்கடை வடிகால்கள் அனைத்தும் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது, உடைந்த சாக்கடை வடிகாலில் அகற்றப்படாத நிலையில், மரக்கிளையும் கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளன. இதனை அகற்றி, சீரான முறையில் சாக்கடை வடிகால் செல்ல வழிவகை ஏற்படுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளன.