மாவட்ட மாறுதலை கண்டித்து ஓமலூர் ஒன்றிய அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ஓமலூர், மார்ச் 6: ஓமலூர் ஒன்றியத்தில் அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் 67 ஊராட்சிகள் உள்ளன இந்த ஊராட்சிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஆங்காங்கே உள்ளநீர் ஆதாரங்களை கொண்டு குடிநீர் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் அந்ததந்த ஊராட்சி செயலாளர்கள், அதிகாரிகள் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பிடிஓக்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஒட்டு மொத்தமாக வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த மாவட்ட மாறுதலை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலளார்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கிராமங்களில் கோடைகால வறட்சி என்பதால் குடிநீர்வினியோகிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட பணி மாறுதலை ரத்து செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளனர்.

Related Stories: