தோகைமலை, மார்ச் 6: தோகைமலை அருகே ஆதிபரந்தாடியில் உள்ள பெரியகாண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி பரந்தாடியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரிய காண்டியம்மன் மற்றும் கன்னிமார் அம்மன் கோயில்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகாண்டியம்மன், கன்னிமார் அம்மன், மந்திரமகாமுனி, வீரமகாமுனி, செல்லாண்டியம்மன், பேச்சாயி, பொன்னர், சங்கர், தங்காள், மாயவர், வீரபாகுசாம்புகன், சடைமுனி, சின்னமுனி, ஆதிபட்டக்காரர்கள், காரமரம் குடியிருந்த வாக்கு ஸ்தானபதி, சந்தன கருப்பண்ண சுவாமி, கல்காளை வாகனம் ஆகிய தெய்வங்களுக்கு நான்குகால பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக அண்ணன்மார் பொன்னர், சங்கர், மாயவர், தங்காள், வீரபாகுசாம்புகன் ஆகிய தெய்வங்களுக்கு படுகளம் போட்டு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.