அம்பத்தூர்: கள்ளிக்குப்பம் மேற்கு பாலாஜி நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் உடைந்த மேற்கூரையை அதிகாரிகள் சீரமைக்காததால் பயணிகள் வெயில், மழையில் அவதிக்குள்ளாகின்றனர். அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் கள்ளிகுப்பம் மேற்கு பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான சக்தி நகர், கிழக்கு பானு நகர், திருமலை பிரியா நகர், ராஜிவ்காந்தி நகர், திருத்தணி நகர், இந்திரா நகர், வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த பேருந்து நிறுத்தம் வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுத்தத்தில் இருக்கை, மின் விளக்கு வசதிகளுடன் நவீன நிழற்குடை அமைத்தது. ஆனால், முறையாக பராமரிக்காததால் தற்போது மின்விளக்கு உடைந்து இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேற்கூரை உடைந்துள்ளதால், வானமே கூரையாக உள்ளது. இதனால், வெயில், மழைக் காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.