விக்கிரவாண்டி, பிப். 15: மயிலத்தில் 2 வாலிபர்களிடம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரத்தில் இருந்து கிளியனூருக்கு பைக்கில் கஞ்சா கடத்துவதாக மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் மயிலம் கள்ளக்கொளத்தூர் சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலம் சாலையில் இருந்து கள்ளக்கொளத்தூர் நோக்கி திரும்பிய பைக்கை நிறுத்தி விசாரித்த போது பைக்கில் இருந்த 2 வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் தலா ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலம் 2 இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் புதுவை மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையை சேர்ந்த பழனி மகன் நடராஜன் (38), விழுப்புரம் பழைய சிந்தாமணி சாலையை சேர்ந்த மனோகர் மகன் ராஜா (40) எனவும் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.