சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை, ஜன. 23: சென்னை, காசிமேட்டில் சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டை குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரேசன் (19). கடந்த சில தினங்களாக, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் சுந்தரேசன் நெருங்கி பழகியுள்ளார். கடந்த 18ம் தேதி, சிறுமி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகளை பல இடங்களில் தேடி பார்த்தும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காசிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுந்தரேசன், சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர், நேற்று காலை சுந்தரேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: