மாநகர பஸ்சில் மோதல் 4 மாணவர்கள் கைது

புழல், ஜன. 23: மாநகர பஸ்சில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து செய்தனர்.  சென்னை பிராட்வேயில் இருந்து நேற்று  முன்தினம் மாலை 3 மணிக்கு செங்குன்றம் நோக்கி மாநகர பஸ் புறப்பட்டது. புழல், அம்பேத்கர் சிலை அருகே சிக்னலில் நின்றபோது பஸ்சில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம் முற்றி, அடிதடி ஏற்பட்டது.  இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சென்று மாணவர்களை பிடிப்பதற்காக பஸ்சில் ஏறினர். இதனால் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவர்கள் 15 பேரும் இறங்கி ஓடிவிட்டனர்.

அப்போது சாலையில் நின்றிருந்த 4 மாணவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து அவர்களிடம் இருந்த 2 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பிடிபட்ட 4 பேரையும் புழல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், புழல் கன்னடப்பாளையம், திருவிக தெருவை சேர்ந்த ராஜேஷ் (18), அலமாதி அடுத்த வாணியம் சத்திரம், பூச்சிஅத்திப்பேடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (19) அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த 15 மற்றும் 17 வயது சிறுவர்கள் என்பதும், இவர்கள் சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: