×

குழித்துறையில் விபத்தில் தாய் பலி சிகிச்சை பலனின்றி குழந்தையும் சாவு

களியக்காவிளை, ஜன.18: குழித்துறையில் பைக் மீது அரசு பஸ் உரசிய விபத்தில் பெண் பலியானார். இதில் படுகாயமடைந்த, 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.குமரி மாவட்டம் திருவட்டார்  அருகே பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பொலிப்பாஸ் (45). இவர் ஒர்க்ஷாப்  நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன் மாலை இவர் தனது மனைவி மேரி செலஸ்டின்  (40) மற்றும் தனது 2 குழந்தைகளுடன் பைக்கில் திருத்துவபுரம் அருகே  குறுமாத்தூர் பகுதியில் உள்ள மேரி செலஸ்டியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று  கொண்டிருந்தார்.குழித்துறை பகுதியில் வைத்து பின்னால்  திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் பைக்கை முந்திச்செல்ல  முயன்றது. அப்போது பஸ்சின் பின்பகுதி பைக் மீது லேசாக உரசியது. இதில், பைக்  நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி  பொதுமக்கள் இவர்களை மீட்டு குழித்துறை பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

படுகாயமடைந்த  மேரி செலஸ்டின் மற்றும் 4 வயது மகன் அக்ஷித் ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக  திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை  பலனின்றி மேரி செலஸ்டின் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்ஷித் நேற்று உயிரிழந்தார். அக்ஷித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...