சின்னமனூர், டிச. 7: சின்னமனூர் அருகே உள்ள எரச்சக்கநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். குறிப்பாக 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். மேற்படி வகுப்புகளில் ஆசிரியர்கள் செல்வரதி, செந்தாமரை என்ற ஆசிரியர்கன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த இரு ஆசிரியர்களும் தீண்டாமை நோக்கத்துடன் பேசுவதாக கூறி தேனி கலெக்டரிடம் ஒரு தரப்பினர் புகார் கொடுத்து வந்தனர். அதனடிப்படையில் தேனியிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் தீண்டமை என குறிப்பிட்ட மாணவ, மாணவியர்களிடம் விசாரனை நடத்தினர். மேலும் நீண்ட காலமாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் நடக்கின்ற பனிபோர் பற்றியும் விசாரித்தனர்.
இதற்கிடையில் நேற்று ஒரு தரப்பினர் மேற்படி ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர். இந்நிலையில் மற்றொரு தரப்பினரின் தூண்டுதலின் பேரில் 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களும் பள்ளியை விட்டு வெறியேறி அதனை கண்டித்திடும் விதமாக ஆசியர்களுக்கு ஆதரவாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி விசாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தந்தார். பின்னர் தாமதமாக சின்னமனூர் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினர். இந்நிலையில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி தலைமை ஆசிரியர் கோவிந்தன், ஆசிரியைகள் செல்வரதி, செந்தாமரை ஆகியோர்களை மாவட்ட கல்வி அலுவலர் கருப்பசாமியிடம் விசாரணைக்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து விசாரனை நடந்து வருகிறது.