சங்ககிரி, நவ.16: தமிழநாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை சங்ககிரி தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு கிளை தலைவர் ஆண்டிமுத்து தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். இதில் சங்ககிரி தாலுகாவிற்குட்பட்ட 31 கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர். கிளை பொருளாளர் தீனதயாளன் நன்றி
கூறினார். இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், வட்டத்தலைவர் முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர் கோபால் ஆகியோர் தலைமையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ், நாள் கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு சிறப்பு படி வழங்குவதுடன், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 30 சதவீதமாக உயர்த்தி, 10 ஆண்டுகள் பணி மூப்பினை, 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்கு, இறுதியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.