ஏற்காடு, நவ.15: ஏற்காடு ஜெரினாக்காடு கிராமத்தில் ₹6.70 லட்சம் மதிப்பில் தார் சாலையை சீரமைக்கும் பணியை எம்பி காமராஜ் தொடங்கி வைத்தார். ஏற்காடு தாலுகா ஜெரினாக்காடு கிராமத்தில், முக்கோணம் பகுதியில் இருந்து மாரியம்மன் கோயில் வரையிலான தார்சாலை மிகவும் பழுதடைந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வந்தனர். இந்த சாலையை புதுப்பித்து தரவேண்டும் என, கள்ளக்குறிச்சி எம்பி காமராஜிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர், ₹6.70 லட்சம் மதிப்பில் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி காமராஜ் மற்றும் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏற்காடு முன்னாள் சேர்மன் அண்ணாதுரை, புகழேந்தி, விஜய், மனோ, முருகன், முருகேசன், குணசேகரன், பாலு, அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.