கரூர், நவ. 15: தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி மருதம்பட்டி, மணவாடி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அந்த பகுதியில் உள்ள வீட்டில் உள்ள நீர் சேமிப்பு தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதை கண்டறிந்து அந்த வீட்டின் குழந்தைகளை அழைத்து தொட்டியின் மீது ஏற்றி, கொசு புழுக்கள் உள்ளதை சுட்டிக் காட்டி இதுபோன்ற கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு நோய் பரவுகிறது. எனவே, உங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் இதை மாணவர்களாகிய நீங்கள் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சேமித்து வைத்திருக்கும் நீரை நன்றாக துணிகள் மற்றும் மூடிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாகி அது நமக்கு நோயை உருவாக்குவதுடன் அண்டை அயலாருக்கும் நோயை பரப்புகிறது.