கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* ஒரே ஒரு கல் உப்பைப் போட்டு காபி பொடி போட்டு டிக்காஷன் இறக்கினால் நல்ல ஸ்ட்ராங்கான டிக்காஷன் கிடைக்கும்.

* வெந்தயக் குழம்பு செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் கடலைப்பருப்பு பயன்படுத்த சுவை அதிகம்.

* எலுமிச்சை சாற்றை சூட்டுடன் இருக்கும் பாத்திரத்தில் சேர்க்கக் கூடாது. அதனால் சாறு கசந்து போய்விடும். சூடு ஆறிய பிறகே சேர்க்க வேண்டும்.

* கேக் கலவையில் இரண்டு சொட்டு கிளிசரின் சேர்க்க கேக் மென்மையாக இருக்கும்.

- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

* வெண்டைக்காய் மேல் கடுகெண்ணெய் தடவி வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும். வாடாது.

* காய்கறிகள் வெந்த பின்பே உப்பு சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் அவற்றினுள்ள சத்துகள் வீணாகிவிடும்.

* அரிசி டப்பாவில் வசம்பு அல்லது வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது.

* பூண்டுடன் ராகி கலந்து வைத்தால் பூண்டு புழு பிடிக்காமல், கெடாமல் இருக்கும்.

- எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.

* இனிப்புகள் செய்யும் போது சர்க்கரை அல்லது வெல்லத்துடன் ஒரு துளி உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது.

* அல்வா செய்யும் போது கடைசியில் சிறிது மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறினால் அல்வா பளபளவென இருக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

* இட்லிப் பொடி தயாரிக்கும் போது மல்லி 3 ஸ்பூன் சேர்த்து தயார் செய்தால் இட்லிப் பொடி வாசனையாக இருக்கும்.

- சீதாலட்சுமி, கேரளா.

* உருளைக்கிழங்கு கூடையில் ஆப்பிள் ஒன்று வைத்தால் உருளைக்கிழங்கு முளை விடாது.

* பேபி உருளைக்கிழங்குடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்தால் வெடிக்காமல் இருக்கும்.

* தக்காளி குருமா செய்யும்போது சிறிது வெங்காயம், சிறிது பொட்டுக் கடலை அரைத்து சேர்த்தால் குழம்பு சுவையான மணத்துடன் அட்டகாசமாக இருக்கும்.

- மாலா பழனி ராஜ், சென்னை.

* கடலை மாவுக்கு பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு, காரம் போட்டு பஜ்ஜி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

* மணத்தக்காளி வற்றல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே அலாதி.

* எலுமிச்சை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை  சேர்த்தால்  வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

* கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைக்கும்போது தக்காளி அல்லது புளிக்கு பதிலாக நெல்லிக்காயை துருவி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* அரிந்த பூசணிக்காய் மீதமாகி விட்டால் அதை அடுத்த நாள் சமைக்க முடியாது. உப்புப் போட்டு வேகவைத்து அப்படியே எடுத்து வைத்தால் அடுத்த நாள் வரை கெடாமல் இருக்கும்.

* தயிர் சீக்கிரமே புளித்து விடுகிறதா? இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக தயிரில் போட்டால் புளிக்காமல் இருக்கும்.

- எஸ். மாரிமுத்து, சிட்லபாக்கம்.

* எந்த பழமென்றாலும் அதில் ஜூஸ் செய்யும் போது ஒரு சிட்டிகை உப்புத் தூள் சேர்த்தால் பழத்தின் ருசியும், மணமும் கூடும்.

* ஊறுகாய் தயாரிக்கும் போது கல் உப்பை பயன்படுத்துவதென்றால் வெறும் வாணலியில் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துபவர்கள் வழக்கத்தை விடக் குறைவாக உப்பைப் போட வேண்டும். இல்லையென்றால் ஊறுகாய் செய்த சில வாரங்களுக்குள் உப்பு கூடிவிட்ட ருசி ஏற்படும்.

- எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

* அவலை பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை சேர்த்து அரைத்து அவலுடன் சேர்த்து, தயிரில் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையான அவல் பச்சடி தயார்.

* கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதிது போல் ஆகி விடும். நறுக்கவும் எளிது.

* பச்சை கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவு பதார்த்தங்களில் சேர்த்்தால் சத்தும் அதிகம், மணமும் கூடுதலாக இருக்கும்.

- எஸ்.பாவனா, திண்டுக்கல்.

நாட்டுக் கோழி குருமா

தேவையானவை:

நாட்டுக்கோழி - 1 கிலோ,

சின்ன வெங்காயம் - 50 கிராம்,

தக்காளி - 2,

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

கரம் மசாலா பவுடர் - 1 ஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,

தேங்காய் - அரை மூடி,

கசகசா - ஒரு ஸ்பூன்,

முந்திரி - தேவையான அளவு,

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நாட்டுக் கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். மாசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக் கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுத்தால் சுவையான நாட்டுக் கோழி குருமா ரெடி.

தொகுப்பு : கவிதா, சிதம்பரம்.

Related Stories: