பெரம்பூர், அக். 30: வியாசர்பாடியில் இரு ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு சரமாரி வெட்டி விழுந்தது. இதுதொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஆறாச்சி (எ) சதீஷ்குமார் (22). பிரபல ரவுடி. இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி காவல்நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து வந்தபோது எதிரே ஏ.கல்யாணபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (32) என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், ஆறாய்ச்சிக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் முருகன் (25), ஆகாஷ் (24), மணி (26) ஆகியோர் சம்பவ இடத்திற்கு அரிவாளுடன் விரைந்து வந்தனர். யோகேசுக்கு ஆதரவாக பெருமாளும் அரிவாளுடன் வந்தார். இதில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொண்டனர்.