×

மணக்கும் மஞ்சள் பூசணி சமையல்!

நன்றி குங்குமம் டாக்டர்

மஞ்சள் பூசணிக்காய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படவும். சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காயை தினமும் உண்டு வர, இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும்,  மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. எனவே  நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கிறது.மேலும், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும்  உதவுகிறது.  மஞ்சள் பூசணியில் சில உணவுகளை  பார்ப்போம்:

மஞ்சள் பூசணி இனிப்பு பூரி

தேவையானவை

மஞ்சள் பூசணிக்காய் - கால் கிலோ (துருவியது)
கோதுமை மாவு - அரை கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
ஏலக்காய் - 3
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும்.   வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். வெல்லம் கொதித்து கம்பி பதத்திற்கு வந்ததும்,  துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும்.  பூசணி நன்றாக வெந்ததும் கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய்த் தூள்  அதனுடன் சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்கு பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர், பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மஞ்சள் பூசணி இனிப்பு பூரி தயார்.

பூசணிக்காய் அல்வா

தேவையானவை

பூசணிக்காய் - கால் கிலோ
சர்க்கரை- அரை கிலோ
பால் - கால் லிட்டர்
நெய்- 100 மி.லி
முந்திரி - 6
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி.

செய்முறை:  பூசணிக்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு வேக வைக்க வேண்டும். பூசணிக்காய் நன்றாக வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையை போட்டு,  அடிப்பிடித்துக் கொள்ளாதவாறு அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் வறுத்த முந்திரியை போட்டுக் கிளறவும். சுவையான அல்வா ரெடி.

பூசணிக்காய் மோர் குழம்பு

தேவையானவை


மோர் - 1 கப்
பூசணிக்காய் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் -  அரை கப்
கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி

மிளகு -  அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் -  அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -  அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் -  தேவைக்கேற்ப
தண்ணீர் -  தேவைக்கேற்ப.

செய்முறை : 
  முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய மூன்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் பூசணிக்காயை நறுக்கி தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  துருவிய தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, ஓரளவு அரைத்து, அதில் இஞ்சி பூண்டு விழுது போடவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும். பின்பு அதில் மோரை ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து கொதிக்க விடவும்.  அதன் பின் வேகவைத்துள்ள பூசணிக்காய் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். அதன் பிறகு அதை இறக்கி விட வேண்டும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Tags :
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!