ஆஸ்துமாவிலிருந்து தற்காத்துக்கொள்ள!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதினரையும் தாக்கி, பிரச்னைக்குள்ளாக்கிவிடும். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்ப பின்னணி போன்றவைகளும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமா பாதிப்புக்கு காரணமாகிறது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருவதாக ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். ஆண்களுக்கு அதிகமாக வரக் காரணம் அதிக மன அழுத்தம்.

 கவலை, இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை பிரச்னைகளாக உருவாகி, பின் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு மூச்சுத்திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.தற்காலத்தில் நவீன மருந்துகள் வந்து பலனைக் கொடுத்தாலும், சில எளிய சித்த மருத்துவ வைத்தியங்கள், வீட்டிலிருந்தே நம்மை சரி பண்ணிக் கொள்ள உதவுகிறது. அவை என்னவென்று பார்ப்போம்:

தூதுவளை செடியின் இலைகளை அடிக்கடி ரசம் வைத்து உணவுடன் உண்டுவர, சளி பிரச்னை இருக்காது. மூச்சு பிரச்னையும் வராது.துளசி இலைகளை மென்று சாப்பிட, எளிய வழியில் சளி, தொண்டைப் பிரச்னைகளை சரி செய்கிறது.வில்வ இலைகளை மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட, நல்ல பலனைத் தரும்.முசுமுசுக்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச்சாறை வெதுவெதுப்பான நீர் கலந்து ஜூஸாக குடிக்க, உடலுக்கு தேவையான எனர்ஜியை தந்து, நோய்த் தொற்றிலிருந்து காக்கும். கற்பூரவல்லி இலை 3, மிளகு 3, வெற்றிலை 2 சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, வற்றியவுடன் அந்த நீரைப் பருக, நெஞ்சுசளி, கபம் போன்றவற்றை நீக்கி, எளிதான சுவாசத்துக்கு வழி வகுக்கும். அருகம்புல் சாறை அதிகாலையில் பருகி வர, நோய்த்தொற்றை நீக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர, சளித் தொல்லை குணமாகும். மிளகுத்தூளை சாதத்தில் போட்டு சாப்பிட, நெஞ்சகப் பிரச்னை வராமல் தடுக்கும். மாசு உள்ள இடத்தை தவிர்ப்பதும், அலர்ஜி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், மூச்சுப் பயிற்சி, தியானம் பழகுவதும் ஆஸ்துமா தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய தீர்வாக இருக்கிறது.

தொகுப்பு : மஹாலட்சுமி சுப்ரமணியன்

Related Stories: