பெரியார் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவ.ராஜசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், நாஞ்சில் பிரசாத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேப்பேரி பெரியார் திடலில் பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், துணைப்  பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்  டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் கே.கழககுமார், சைதை  ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், டி.சி.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கட்சியின் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் திருவுருவப்  படத்திற்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர்  மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: