குரோம்பேட்டையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் இருவர் பரிதாப பலி

தாம்பரம்: குரோம்பேட்டையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (72). இவர் டிரைவர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி தாறுமாறாக வந்த டிப்பர் லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தினத்தின் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கியெறியப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பின்னர், தாறுமாறாக ஓடிய லாரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை மேம்பாலம் அருகில் திருமுடிவாக்கத்தில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டிரைவர் வரதன் (53) என்பவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரத்தினத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  அவர் உயிரிழந்தார். இதையடுத்து இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  போலீசார் அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சேலம் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: