அவிநாசி, ஆக.14: அவிநாசியில் சம்பளம் தராததால், செக்யூரிட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (44). இவர், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீதர் நேற்று அவரது நிறுவனம் முன்பு நின்றுகொண்டு திடீரென பிளேடால் நெற்றியில் அறுத்து கொண்டார். மேலும், கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டலை விடுத்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சென்ற மாத சம்பளத்தை தனியார் நிறுவனம் தரவில்லை என கூறினார். இதையடுத்து தனியார் நிறுவனத்திடம் பேசி, ஸ்ரீதருக்கு சேர வேண்டிய சம்பள பணத்தை கொடுக்குமாறு போலீசார் கூறியதையடுத்து அவர் சென்றார்.