×

நாகர்கோவிலில் சினிமா பாணியில் மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய ஆட்டோ : 6 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிர் தப்பினர்

நாகர்கோவில், ஆக.13 : நாகர்கோவிலில் மின் கம்பத்தில் மோதி, காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி ஆட்டோ அந்தரத்தில் தொங்கியது. இதில் ஆட்ேடாவில் இருந்த 6 வயது குழந்தை உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் நோக்கி ஆட்டோ ஒன்று நேற்று மதியம் சென்று கொண்டு இருந்தது. ஆட்டோவில் கணவன், மனைவி உள்பட 3 பேர் இருந்தனர். ஆட்டோ தாறுமாறான வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவக்கல்லூரி கடந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென குறுக்கே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை டிரைவர் திருப்பி உள்ளார். இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் அருகில் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, அந்தரத்தில் நின்றது.

இதில் ஆட்டோவுக்குள் இருந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அலறினர். டிரைவர் படுகாயத்துடன் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அப்பகுதியினர் ஆட்டோவில் இருந்தவர்களை வெளியே மீட்டனர். இதில் 6 வயது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவருக்கும் தலையில் காயம் இருந்தது. உடனடியாக அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் தப்பினர். சினிமாவில் வருவது போல் ஆட்டோ அந்தரத்தில் சென்றதை பார்த்து பதற்றம் அடைந்தோம் என அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினர். நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...